திருமண முறை

பண்டைத் தமிழ் நாட்டில் தொழில் முறையில் இனங்கள் ஏற்பட்டன. வேளாண்மை செய்தவர்கள் வெள்ளாளர் என்றழைக்கப்பட்டனர். கொங்கு நாட்டில் வேளாண்மை செய்தவர்கள் கொங்கு வெள்ளாளர் என்றழைக்கப்பட்டனர். வேளாண்மை செய்தவர் என்ற பொதுப்பிரிவில் வேளாளக் கவுண்டர்கள் ஒரு பிரிவினர் ஆயினர்.

திருமணங்களும், கொங்கு வெள்ளாளர் திருமணச் சடங்குகளும்:

கொங்கு வெள்ளாளர் திருமண நிகழ்ச்சிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்று வந்தன. முதல் நாள், 'நாள் விருந்து'. இந்நாளில் நெருங்கிய உறவினர் மணமகன், மணமகள் வீட்டார்க்கு விருந்து செய்வர்.

இரண்டாம்நாள்

உறவினர்களுடன் இணைந்து மண ஏற்பாடுகள் செய்வர். பந்தலிடுதல், முகூர்தக்கால் வெட்டுதல், மணமகனுக்குக் குடிமகன் முடிதிருத்துதல், கொட்டு முழக்கு வாயிலாகத் திருமணம் நடைபெறத் தொடங்குவதை ஊரார்க்கு அறிவித்தல், மணமக்கள் வீட்டில் விருந்திடுதல், மணமகன் மணமகள் வீட்டிற்குப் புறப்படுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மணமகள் வீட்டில்தான் மண ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மூன்றாம் நாள்

முகூர்த்த நாள். உரிய சடங்குகள் முடிக்கப்பெற்று மணமக்கள் மணமேடையில் அமர்த்தப் பெறுவர். மணமகளுக்கு மங்கல நாண் அணிவிக்கப் பெற்று, மங்கல வாழ்த்து ஓத, திருமணம் நிறைவுக்கு வரும். விருந்துடன் திருமணம் முடிவுறும்.

திருமண நிகளிசிகளை இனப் பெரியவர் ஒருவரான அருமைக்குரியவர் நடத்தி வைப்பார்.

மங்கல வாழ்த்து பாடல்:

பெண் பார்ப்பதில் தொடங்கி, திருமணம் முடியும் வரையிலான எல்லா நிகழ்ச்சிகளையும் இப்பாடல் தொகுத்துரைக்கிறது. ஒரு பேரரசன் இல்லத் திருமணத்தை விவரிப்பது போலப் பாடற் கருத்துகள் உள்ளன. இப்பாடல் வழியாக அன்றைய கொங்கு வெள்ளாளரின் நிலை, உறவு முறை, சமுதாய நிலை பற்றி நன்கு அறிய முடிகிறது. தமிழ் மக்களின் வாய்மொழி இலக்கியத்தோடு வைத்து எண்ணப்பெறும் தகுதியை இது பெற்றிருக்கிறது. அகவலில் அமைந்து, ஒரு தனித்த பண் வகையில் பாடப் பெறுகிறது.